கட்டுகிறவர்: சத்தியம் – ஆதாரம்

Home » கட்டுகிறவர்: சத்தியம் – ஆதாரம்

கட்டுகிறவர்: சத்தியம் – ஆதாரம்

சபையை “ஜீவனுள்ள தேவனுடைய சபை” என்று வேதம் அடையாளப்படுத்துகிறது. அது ஒரு குடும்பமாகவும் இருக்கிறது. அந்த சபையாகிய குடும்பத்துக்கு சத்தியமே தூணும் ஆதாரமுமாக இருக்கிறது. சத்தியம் என்பது தத்துவம் அல்ல, அது ஒரு நபர். அந்த நபரைப் புரிந்துகொண்டால்தான் சத்தியமே புரியும்.

இயேசு ஜனங்கள் தம்மை யாரென்று கூறுகிறார்கள் என்று தமது சீஷர்களிடம் வினவினார். ஒருவன் கிறிஸ்துவை என்னவிதமாகப் புரிந்து வைத்திருக்கிறானோ அந்த அடிப்படையில் தான் அவரை அணுகுவான். பேதுரு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து வைத்திருந்த படியால் அவனை அவர் பாக்கியவான் என்று கர்த்தர் வாழ்த்தினார். பேதுருவுக்கு அந்தப் புரிதலைக் கொடுத்த பிதா நமக்கும் அதே வெளிப்பாட்டை அருளியிருக்கிறபடியால் நாமும் பாக்கியவான்களாக இருக்கிறோம்.

கர்த்தரைக் குறித்ததான அறிவும் அவரோடு இருக்கிற உறவுமே சபைக்கு அஸ்திபாரமாக இருக்கிறது. அந்த அஸ்திபாரக் கல்லாக கிறிஸ்துவும், நாம் அவர் மீது கட்டப்படும் கற்களாகவும் இருக்கிறோம். அவரே நம்மை கட்டுகிறவராக இருக்கிறபடியால் நாம் வெட்கப்பட்டுப் போவதில்லை. ஒரு வேளை இப்போது வெட்கம் அனுபவிக்கும் சூழலில் இருந்தாலும் அது நிரந்தரமல்ல, அது மாறி நீங்கள் உயர்த்தப்படும் காலம் சீக்கிரம் வந்துவிடும்.

அவரே உங்கள் அஸ்திபாரம் என்பதை அறிந்துகொள்வீர்களானால் யாரால் நீங்கள் துன்பம் அனுபவித்தீர்களோ அவர்கள் அத்தனைபேர் மீதும் இருந்த வருத்தங்கள் மறைந்துவிடும். அவர்மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாம் பயப்பட்டு ஓடிப்போவதில்லை (நெகேமியா 6:11), ஒருநாளும் அசைக்கப்படுவதுமில்லை. (சங்கீதம் 125:1)

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/jsnyZRY94-8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *