மனுஷனுடைய இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது என்று எரேமியா 17:9 சொல்லுகிறது. இஸ்ரவேல் மக்களை வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனம் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய வழிகளை அறியாமல் போவதே ஒருவன் வழுவிப்போக காரணமாய் இருக்கிறது. எனவேதான் 1 நாளாகமம் 29:18 தாவீது ராஜா ஜனங்களுடைய இருதயத்தை உமக்கு நேராக்கியருளும் என்று கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறார். ஆம், இருதயத்தை நேராக்குகிறவர் நம்மோடிருக்கிறார்.
கர்த்தருக்கு காத்திராமல் அவர் தந்த வாக்குத்தத்தங்களை அடைய குறுக்கு வழிகளை நாடும்போதும், பணத்தை சார்ந்துகொள்ளும்போதும் மனுஷனுடைய இருதயம் வழுவிப்போகிறது. இனி அவர் தரப்போவதில்லை நானே தருவித்துக்கொள்ளப்போகிறேன் என சுய முயற்சிகளில் இறங்கும்போது ஒரு மனிதன் கர்த்தரைவிட்டு விலகிப் போகிறான். அவிசுவாசமே இதற்கான அடிவேராக இருக்கிறது.
அவிசுவாசம் ஒரு மனிதனுக்குள் எப்படி பிரவேசிக்கிறது? கேட்கக்கூடாதவைகளைக் கேட்பதாலும், கேட்க வேண்டியதைக் கேளாமல் இருப்பதாலும் அவிசுவாசம் அவனுக்குள் பிரவேசிக்கிறது. எனவேதான் கர்த்தருடைஅய் வார்த்தையை எப்போதும் கவனிக்க வேண்டும், சபைக்கூடிவருதலை விட்டுவிடாதிருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது.
கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்ளுகிற இருதயமுள்ளவன் அவரையே நம்பியிருக்கிறபடியால் பூரண சமாதானம் அவனை சூழ்ந்துகொள்ளுகிறது. எனவே கர்த்தரைவிட்டு விலகுகிற பொல்லாத இருதயம் நமக்குள் உருவாகிவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாய் இருப்போமாக!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/gY1XoGZ1Pl
Leave a Reply