உங்களாலே மகிமைப்படுகிறார்: விசுவாசத்தின் கிரியை

Home » உங்களாலே மகிமைப்படுகிறார்: விசுவாசத்தின் கிரியை

உங்களாலே மகிமைப்படுகிறார்: விசுவாசத்தின் கிரியை

நமக்கு ஒரு அழைப்பு இருக்கிறது, அந்த அழைப்புக்குப் பின்னே ஒரு தேவசித்தம் இருக்கிறது. அந்த சித்தத்தை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தை கர்த்தரே நமக்கு அருளுகிறார். அதை செய்து முடிப்பதற்கான பெலனையும் அவரே தருகிறார். அதன் மூலம் விசுவாசத்தின் கிரியையை பெலமாய் நம்முடைய வாழ்வில் செயல்படுத்துகிறார்.

கர்த்தர் அருளும் விசுவாசத்தில் விருப்பமும் இருக்கிறது, வல்லமையும் இருக்கிறது. விசுவாசம் இருக்குமிடத்தில் இளைப்பாறுதலும் இருக்கும். விசுவாசம் கேட்டலில் ஆரம்பித்து, செயலில் முடிகிறது. விசுவாசம் செயலாக மாறும்பொழுதுதான் அது கிரியையில் நிறைவேறுகிறது. விசுவாசத்தை துவக்குகிறவரும், பூரணப்படுத்துகிறவரும், அந்த விசுவாசம் குறைவுபடும்பொழுது நம்மைத் தாங்குகிறவரும் அவரே.

ஆகவே விசுவாசத்தை செயல்படுத்துகிறதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். யாக்கோபு 1:25 சொல்லுகிறபடி சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கும்பொழுது நாம் கேட்கிறதை மறக்கிறவர்களாக இராமல் அதற்கேற்ற கிரியை செய்கிறவர்களாக காணப்படுவோம்.

நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவையும், அதை செய்து முடிப்பதற்கான பெலனையும் வார்த்தை தன்னுள்ளே கொண்டிருக்கிறபடியால் நமக்கு தேவையான நேரத்தில் தேவையான வார்த்தையைக் காணும்படி தேவனே அந்த வார்த்தைக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார். அந்த வார்த்தை அவருடைய ஒத்தாசையால் செயலாக மாறி நமக்கு நன்மையைச் செய்து அவரை மகிமைப்படுத்துகிறது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/NZnXvmNY_-c

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *