பலன் அளிக்கிறவர்: தைரியமாய் செயல்படு

Home » பலன் அளிக்கிறவர்: தைரியமாய் செயல்படு

பலன் அளிக்கிறவர்: தைரியமாய் செயல்படு

ஆண்டவராகிய இயேசு தமது சீஷர்களுக்கு உலகெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவிக்கச்சொல்லி கட்டளை கொடுத்து, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்தேயு 28:20) என்ற வாக்குத்தத்தையும் அருளினார். அந்த கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்த போது கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார் என்று மாற்கு 16:20 சொல்லுகிறது. ஆக நம்முடைய தேவன் தம்முடைய பிள்ளைகளை தைரியமாய் செயல்படும்படி ஊக்குவிக்கிறவராக இருக்கிறார். இங்கு தேவன் 100% செயல்படுகிறார், நாமும் 100% செயல்பட வேண்டியதாக இருக்கிறது.

நாம் தைரியமாய் செயல்படுவதற்கு சில அடிப்படை சத்தியங்களை விளங்கிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. யோவான் 5:17ல் கர்த்தராகிய இயேசு சொல்லுகிறார், என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன். அதாவது நமது பிதா கிரியை செய்கிற படியால் நாமும் கிரியை செய்ய வேண்டும். அவர் நமக்காக ஏற்கனவே நல்லதொரு திட்டம் வைத்திருக்கிறபடியால் நாம் சுயமாய் எதையும் செய்ய வேண்டியதில்லை. பிதா குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தான் செய்கிறவைகளை அவருக்குக் காண்பிக்கிறார், ஆகவே அவர் என்ன செய்ய நாம் காண்கிறோமோ அதையே நாமும் செய்யலாம்.

இத்தகைய அறிவை தேவன் நமக்கு எவ்விதம் வழங்குகிறார்?

கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார் என்று 1 சாமுவேல் 3:21 சொல்லுகிறதுபோல தரிசனமும் வெளிப்பாடும் வார்த்தையோடே இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த அறிவை தேவன் தமது வார்த்தையின் மூலமே நமக்கு வழங்குகிறார். வார்த்தையே சித்திரத்தை உருவாக்கும் ஆதலால் நாம் எதையும் உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது நாம் அதைப் புரிந்துகொள்ளுவது கடினமாய் இராது.

ஆகவே இத்தகைய வெளிப்பாட்டைப் பெற்ற நாம் நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல் நமது வழிநடத்துகிற தேவனை நம்பி தைரியமாக செயல்படலாம்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/vfpl4nk3yQY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *